குறிப்பு:

சௌந்தர சுகன் 1987 முதல் 25 ஆண்டுகளாக தொடர்ந்து வெளியாகிறது. சனவரி - 2011 இதழ் எண்:296

சௌந்தரசுகன் அச்சு இதழில் வெளியாகும் படைப்புகளில் சில, சௌந்தரசுகன் வலை இதழில் பதிவாகும். இவற்றை வாசித்து உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். விரிவான விமர்சன மடல்களை சுகன் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்புங்கள்.


Saturday, December 17, 2011


"நா" காத்தல் நன்று


சுழலும் நாக்கு 
சாட்டை


பின்டினியெடுக்கும்
சொற்கள்


விழுங்க முடியாமல்
அவஸ்தைபபடும்
செவிகள்


காயமில்லை எனினும்
சுருங்கிக் கொள்ளும்
உடல்


மனமெல்லாம்
வடுக்கள்
பெயர்த்தெடுக்க முடியாது


காயமும் ரணமும்
அரூபமாய்...


வன்சொற்கள் பட்ட
நெஞ்சத்தில்
சிதறி விடும் உறவுகள்...


சேதாரம்
சொற்களுக்கில்லை
நினைவுகள்தான்
நிம்மதியற்று அலையும்...


நினைத்த கணம்
குத்திய சொற்களால்
ரணமாகி கசியும் எண்ஜானும்

வெக்கையில்
வெளியேறுகிறது
உயிரின் வேர்வை...


தாயின் உள்ளங்கையுள்
மழலை கை
இப்படியாய் இருக்க வேண்டும்
சொற்கள்


"நா" காத்தல் நன்று / யாரும்.


       - கா.அமீர்ஜான்

திசம்பர் - 2011 - சௌந்தரசுகன் 

Sunday, December 11, 2011

தலையாட்டிகள்

     பால் விலையேற்றம், பேருந்து கட்டண உயர்வு எல்லாவற்றிற்கும் காரணம் கருணாநிதிதான் என ஜெயலலிதா தனது செயல்களை ஞாயப்படுத்த முயல்வது பரிதாபகரமாக இருக்கிறது. வாக்களித்த மக்களுக்கு இழைக்கின்ற அநீதி இது, 

     விலையேற்றத்தின் அத்தனை சுமைகளையும் சுமப்பது கருணாநிதி அல்ல. ஜெயலலிதாவை நம்பி வாக்களித்த மிக சாதாரண மக்கள். ஏழை எளிய மக்களை நேரடியாக பாதிக்கிற மிக முக்கியமான பாதிப்புகள் இவை. ஜெயலலிதாவின் பக்குவமின்மையைதான் இது காட்டுகிறது. இந்த விலையேற்றங்கள் உடனடியாக அமுலுக்கு வந்து மக்களை அதிர்ச்சிக்குள்ளர்க்கியது. நிதானமாக பார்த்து பார்த்து செய்ய வேண்டிய விலை உயர்வை இப்படி தடாலடியாக தந்திருப்பது ஜெயலலிதாவின் வீரமாக கூட இருக்கலாம். பாவம் மக்கள். ஜெயலலிதாவை சுற்றி தலையாட்டிக் கூட்டம் தான் இருக்கிறதே தவிர, துணிந்து அவருக்கு எடுத்துரைக்க, அறிவுரை நல்க யாருக்கும் துணிச்சல் இல்லை. சொல்கிறவர்கள் தூக்கியெறியப்படுவார்கள் என்பதைத் தெரிந்தும் இப்படிப்பட்ட விபரீதங்களில் யார்தான் இறங்க முன்வருவார்கள். 

     ஊடகங்களும் பட்டும் படாமல் பேசுகின்றன. ஜெயலலிதாவின் அரசுக்கு இத்தகைய நடவடிக்கைகள் பலவீனமாகவே அமையும். சமச்சீர்கல்வியை எதிர்த்து செலவழித்த கோடிக்கணக்கான பணம், சட்டசபை மாற்றத்திற்கு செலவழித்த பணம், கொடுத்த மற்றும் கொடுக்கப்பட வேண்டிய இலவசங்களுக்கு வேண்டிய பணத்தை எல்லாம் வேறு எந்த வழியில் ஈட்ட முடியும். முந்தைய ஆட்சியின் நல்ல திட்டங்களை களைந்தெறிந்து விட்டு இப்படி தான் என்கிற அகங்காரத்தில் செயல்படுவது புத்திசாலிதனமான ஆட்சி முறை இல்லை என்பதை ஜெயலலிதா அனுபவத்தில் தான் புரிந்து கொள்வார். 

     இன்னும் வரவிருக்கும் தொடர் விலையேற்றங்களை எண்ணி உண்மையிலேயே மக்கள் மிரண்டு போய் நிற்கிறார்கள். ஆட்சி மாற்றம் இப்டிப் பட்ட அவலங்களாய் தங்கள் தலையில் விடியும் என்பதை பாவம் நமது அப்பாவி மக்கள் அறிந்திருக்க மாட்டார்கள். உண்மையில் இந்த 6 மாத ஆட்சியில் வெறுப்புணர்வில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள் மக்கள். தி.மு.க. அரசின் ஸ்பெக்ட்ரம் ஊழல், நில அபகரிப்பு மோசடிகள் எல்லாம் ஏழை, எளிய மக்களை பாதித்தவை அல்ல. ஆனால் இந்த விலையேற்றங்கள் முழுக்க முழுக்க ஏழை எளிய மக்களை, அவர்களின் அன்றாட வாழ்வை குதறி எடுக்கின்ற பேரிடர்கள். மக்கள் ஒப்பு நோக்குவார்கள். இலாப, நட்டக் கணக்குகளை போட்டுப் பார்ப்பார்கள். ஆள்கிற ஜெயலலிதா இப்போதாவது நிதானிக்க வேண்டும். தனக்கு மக்கள் அளித்த வாய்ப்பை எண்ணி சிந்திக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக அவர்களின் அவலத்தை சொல்ல வேண்டியது நமது எழுதுகோலின் தலையாய கடமை.

     அண்ணா நூலகத்தின் இடமாற்றம் இந்த அரசு அறிவுலகத்தின் மீது எப்படிப்பட்ட மதிப்பை வைத்திருக்கிறது என்பதற்கான அடையாளமாக இருக்கிறது. முழுக்க முழுக்க நூலகத்திற்கு என்று வடிவமைக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்டு செம்மையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிற நூலகத்தை மாற்றும் முடிவு மிகவும் அபத்தமானது.

     தமிழகத்தில் இன்றைக்கு அரசு மருத்துவமனைகள் பாழ்பட்டு கிடக்கின்றன பல வழிகளிலும். அந்த மருத்துவமனைகளில் உள்ள குழந்தைகள் பிரிவை முறைப்படுத்தி, செழுமைப்படுத்தி நல்ல முறையில் இயக்கினாலே மக்கள் பயன் அடைவார்கள். சென்னையின் மிகப்பெரிய குழந்தைகள் மருத்துவமனை ஒரு காலததில் எவ்வளவு தரம் வாய்ந்ததாக இருந்தது. இன்று எப்படி இருக்கிறது. அதையெல்லாம் சரி செய்வதை விட்டு விட்டு முந்தைய ஆட்சியில் அமைக்கப்பட்டது என்கிற ஒரே காரணத்திற்காக அண்ணா நூலகத்தை கலைப்பது என்பது அதிகார அறியாமை.

     எதையும் தான் தான் தொடங்கியிருக்க வேண்டும். தான் தொடங்கியதாகத்தான் கல்வெட்டு பேசவேண்டும் என்று நினைத்து செயல்பட்டால் அது வீண் பொருள் செலவுக்குத்தான் வழி வகுக்கும். இந்தச் சிந்தனை மனநோயும் கூட. முந்தைய அரசின் நல்ல திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவதும் புதிய நல்ல திட்டங்களைக் கொண்டு வந்து மக்களுக்கு நன்மைகளை செய்வதும்தான் நல்லாட்சிக்கு இலக்கணம் என்பதை ஜெயலலிதா உணர்வாரா என்பது பெரிய கேள்விக்குறிதான். அரசு செலவிடும் ஒவ்வொரு ரூபாயையும் பார்த்து பார்த்து செலவிட வேண்டும். அது மக்களின் பணம். ஆட்சியாளர்கள் அடிப்படையில் தெரிந்துக் கொள்ள வேண்டிய பாடம் இது. 

     காமராஜர் ஆட்சியின் போத கவிஞர் எஸ்.டி.சுந்தரம், முதலமைச்சர் காமராஜரிடம் நாமும் நம் ஆட்சியின் சாதனைகளையெல்லாம் விளக்கி ஒரு விளம்பர படம் எடுப்போம் அத்திரைப்படத்தைத் தமிழகத்துத் திரையரங்குகள் அ8னத்திலும் திரையிடச் செய்வோம் என்றாராம்.

     சரி இதற்கு என்ன செலவாகும்? என்று கேட்டாராம் காமராஜர். அதற்கு கவிஞர் சுமார் 3 இலட்சம் வரை செலவாகும் என்றாராம். துடித்துப் போன காமராஜர் அடேங்கப்பா செலவு மூணு இலட்சமா? மக்களோட வரி பணத்துல நமக்கு விளம்பரமா? அந்தப் பணத்துல நான் இன்னும் 3 பள்ளிக்கூடத்தைக் கட்டி திறந்திடுவேன். வேண்டாம், இந்த மாதிரி யோசனைகள் எல்லாம் வேண்டாம் என்றாராம். 

     அதனால்தானே காமராசர் தன்னைவிட மிக வயது குறைந்த அரசியல் அனுபவம் இல்லாத தியாகம் எதவும் செய்யாத ஒரு இளைஞனிடம் தோற்றுப் போனார். அவர் தோற்றுப்போவதைப் பற்றிக் கவலைப்படவில்லை. மக்கள் நலன் பாதிக்கக்கூடாது என்று கவலைப்பட்டார். அதனால்தான் அவர் பெருந்தலைவர். எப்படிப்பட்ட தலைவர்கள் அமர்ந்திருந்திருக்கிறார்கள் தமிழகத்து முதலமைச்சர் நாற்காலியில். வீழ்ந்துப் போன மரத்தின் அருமையை இப்போது நினைத்துப் பார்த்து என்ன பலன்? அது போன்ற மரங்கள் இனி முளைக்குமா? என்பதற்கான கேள்வி மட்டும் கையில் இருக்கிறது. பாலைவனத்தில் அரசமரம், ஆலமரம் முளைப்பது என்பது நடக்கிற காரியமா என்ன?


     


Tuesday, August 9, 2011

எதிர்ப்பதம்

மனிதர்களின்
நிழல்களுக்குள்
மௌன நரம்புகள் !

உயிர்ப்பின்
நகலென்றாலும்
உணர்வின்
அசல் அல்ல !

கனவுகள்
நினைவுகளின்
மலடுகள் !

காற்றிலாடும்
ரோசாவின்
பேரழகு
மண்ணிலிருந்து
என்பதை
நம்ப மறுத்து
மயங்குகிறது
மனசு !

எதார்த்தத்தின்
எதிர்ப்பதம்
தேடி அலையும்
மனசின் பாய்ச்சல்
அடங்க மறுக்கிறது
எந்த இலாகானுக்கும் !

- சுகன்.

Sunday, June 5, 2011

தலையங்கம் - சமச்சீர்கல்வி

சமச்சீர் கல்வியை மறுத்து முதல் அதிர்ச்சியை, நாட்டின் பெரும்பான்மையாக இருக்கக் கூடிய, வாக்களித்ததில் பெரும் பங்கு வகித்த ஏழைத்தமிழ் மக்களுக்கும், அவர் தம் குழந்தைகளுக்கும் தந்திருக்கிறது ஜெயலலிதா அரசு.


சமச்சீர் கல்வி தரமற்றக் கல்வி, எல்.கே.ஜி மாணவர்களுக்கு சொல்ல வேண்டிய கல்வியை முதல் வகுப்புக்கு கொடுக்கிறார்கள். பணக்காரர்களை ஏழைகளாக ஆக்கப் பார்க்கிறார்கள். மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி அரசுப் பள்ளிகளைப் போன்று தரம் குறைந்த கல்வியை தனியார் பள்ளிகளும் கொடுக்க வேண்டும் என்கிற நோக்கம் கொண்ட கல்வி, என்று கல்வி வியாபாரிகள் குதிக்கிறார்கள். தடை செய்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துகளை தெரிவிக்கிறார்கள். 200 கோடி மக்கள் பணத்தில் அச்சடிக்கப்பட்ட நூல்களை குப்பையில் போட்டு விட்டு பழைய நூல்களை, பள்ளிகள் திறக்கும் தேதியை தள்ளி வைத்து அச்சடிக்க தொடங்கியிருக்கும் ஜெயலலிதா அரசின் போக்கு கண்டிக்கத்தக்கது.


சமச்சீர்கல்வி நூல்களை தயாரித்தது கருணாநிதியோ அல்லது அவரது வாரிசுகளோ அல்லது தி.மு.க. கழக கண்மணிகளோ இல்லை. அதை தயாரித்தது கல்வியாளர்கள், அறிஞர்கள், தேர்ந்த ஆசிரியர்கள். அதற்காக பல திங்கள்கள் உழைத்து உண்ணாமல், உறங்காமல் அர்ப்பணிப்பு உணர்வோடு வேலை செய்து தயாரித்திருக்கிறார்கள். குறைகள் இருக்கலாம் அவற்றை களையலாம். கருணாநிதியே சொல்வது போல அவரது செம்மொழிப்பாடல்தான் உறுத்துகிறது என்றால் அதை நீக்கிவிடலாம். அடுத்தடுத்த ஆண்டுகளில் தவறுகளை திருத்தி, திருத்தியப் பதிப்புகளை வெளியிடலாம்.


ஆட்டம் என்ற சொல்லுக்குப் பொருள் இதற்கு மேல் பிளக்க முடியாது என்பதுதான். இது அணுவைப் பற்றிய ஆரம்ப காலகட்டங்களில் வைத்தப் பெயர். ஆய்வு செய்து வளர வளர அணுவைப் பிளந்து சாதனை செய்தார்கள். என்றாலும் இப்போதும் அதன் பெயர் ஆட்டம் தான். இது போன்றுதான் இத்தகைய முயற்சிகளும். சமச்சீர் கல்வி என்பது தேர்ந்த கல்வி வல்லுநர்களால் வடிவமைக்கப்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கானது. நீண்ட நாள் கனவு. அதை தனது அதிகார மனப்பாங்கால் ஒரு உத்தரவில் குப்பைக்கு அனுப்பும் ஜெயலலிதாவின் அரசு வருகிற ஐந்தாண்டுகளில் என்னஎன்னவெல்லாமோ செய்யப் போகிறதோ என்கிற அச்சத்தை கிளப்பியிருக்கிறது என்பதை முதலில் ஜெயலலிதா உணர்ந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் அடுத்த ஐந்தாண்டுகளுக்குப் பிறகும் கட்டாயம் தேர்த்ல் வரும்... மக்களின் கையில் வாக்குரிமை தீர்ப்பை எழுத தயாராய் இருக்கும்.

Wednesday, June 24, 2009

களமும் காட்சியும்

அவர்கள் விளையாடுகிறார்கள்
ஒரே நேரத்தில்
விளையாட்டு மைதானத்திலும்
மக்களின் வாழ்விலும்

ஸ்கோர் என்னவென
கேட்பவர்களுக்கு
அவ்வப்போது சொல்கிறார்கள்
நாலு விக்கெட்டிற்கு
நூறு ரன்
ஒரு ரவுண்ட்
விமான குண்டு வீச்சுக்கு
நூறு பிணங்கள்.
மைதானத்தில்
வேகமாய் சுழன்று வரும் பந்துகளில்
நடவு செய்த குச்சிகள்
சரிந்து வீழ்கின்றன.
விமானத்தில்
குறிபார்த்து போடப்படும் குண்டுகளில்
சிதறி விழுகின்றன
வீதியில் நடமாடும்
மனித உடல்கள்

தொலைக்காட்சியின் முன்னால்
தவமிருக்கும் ரசிகர்களுக்கோ
பரம திருப்தி
ஒரே நேரத்தில்
இருவேறு சேனல்களில்
விறுவிறுப்பான விளையாட்டையும்
உக்கிரமான போரின் மரண ஓலத்தையும்
ஒரே நேரத்தில் பார்க்க முடிவதில்.

இ.சாகுல் அமீது

Monday, June 22, 2009

இருள் குருதி

கோடுகளால் செய்யப்பட்ட
இதயச் சுவர்களுக்குள்
குருதியின் நிறம்
இருளாக இருந்தது

கொஞ்சம் கோடுகளை
இரவலாக கேட்டேன்
சில ஓவியங்களாக
மாற்றி விடலாமே என்று

உரிமை உடையவன்
முறைத்துப் பார்த்தான்
கண்களிலும் கூடக்
காணவில்லை கருநீலத்தை

போவென அதட்டிய
விரலிடுக்குகள் முழுவதிலும்
அங்கங்கே
முளைத்திருந்தன முட்புதர்கள்

கற்பனை என்றுதான்
முதலில் நினைத்தேன்-அவன்
கடித்துத் துப்பிய
வார்த்தைகளின் எச்சில்
முனைகளிலிருந்து
வரிசையாய் உதிர்ந்தன
சிறுசிறு கூர் முட்கள்

வருத்தமாய் இருந்தாலும்
ஓவியக்கோடுகளை
வாங்க முடியவில்லை

என்றாலும் கொப்பளித்தது
இரக்கம்
இவன் போலவே இன்றைய
உலகமும்
மெதுமெதுவாய் மாறுவது
குறித்து!

-அனலேந்தி

நிழல்களோடு நிஜங்கள்

என் நிழல்பட்டு
நடந்து போகும் அவன் நிழலோடு
உரசி செல்கிறது இவன் நிழலும்...

கடந்து கொள்கிற நிஜங்கள்
கைக்குலுக்காமல் தொடர்கின்றன
களர் நிலத்திலும்...

நட்பாக்கி விடும் நிழலின் மரத்தை
வீழ்த்துவதிலேயே இருக்கிறது
மனித விருப்பம்...

அபகரித்தல்
அறியாதவாறே நிகழ்த்தப் படுகிறது
கரை அரிக்கும் அலையாய் வருடி...

அடுக்ககங்களின் நிழல்கள் கூட
நீழ்வதில்லை
குடிசைகளின் திசை நோக்கி...

வளாகங்களை
வசீகரமாக விரித்துக் கொள்கின்றவர்கள்
சுவரெழுப்பிக் கொள்கின்றனர்
மனங்களை...

எழும்பும் சப்தம்
எல்லாச் செவிகளையும் தான்
தீண்டுகிறது...

பார்வைகள் கூட
பட்டுத்தான் நகர்கிறது புறத்தில்...

என்பதை மீறி
தம் நிழல் அலைகளை
தாமே எழுப்பிக் கொள்கின்றனர்
தனக்கானதாக இருக்கும்படி...

ஒரு நாளில்
அவரவர் நிழல்களே
அவரவர்களை விழுங்கி விடுவதிலிருந்து
தப்பிக்க முடியாமல் நிஜங்களாகி விடும்
நிழல்களோடு நிஜங்கள்...

-கா.அமீர்ஜான்